Saturday, 18 July 2020

வீழ்ந்தது விஜயநகரம் 3

வீழ்ந்தது விஜயநகரம்:

ராமராயன் தன் வாழ்க்கையை சாதாரண அலுவலனாக கோல்கொண்டாவில் தன் வாழ்க்கையை தொடங்கியவன். ஆதலால் கோல்கொண்டாவின் அரசியல் விவகாரங்கள் அவனுக்கு ஓரளவு அத்துப்படி. இப்ராஹிம் கோல்கொண்டாவின் அரசனாகும்முன் தன்சகோதரனின் தொல்லையிலிருந்து தப்ப விஜயநகரை நாடினான். 1550ல் தன்சகோதரன் இறந்ததும் அரசனாக இப்ராஹிம்ற்கு உதவினான். தொடக்கத்தில் இருவரும் நண்பராக இருந்தாலும், ராமராயன் அகமது நகருக்கு எதிராக அடிக்கடி போரிட அழைத்ததை இப்ராஹிம் விரும்பவில்லை. தன்னலமே இருவருக்கும் பிரதானமாய் இருந்தது, தன் கையை வைத்தே தன் கண்ணை குத்தவைக்கும் யுக்தியை ராமராயன் கையாள நினைத்தான்.

விஜயநகரபேரரசின் தொடர்தாக்குதலில் மற்ற சுல்தான்களை விட அதிகம் பாதிப்படைவது இப்ராஹிம் குதுப்ஷாவும், ஹீசைன் நைஜம்ஷாவும்தான், இவர்கள் இருவருமே விஜயநகருக்கெதிராக வலுவான முஸ்லீம் கூட்டணி உருவாக காரணமானவர்கள்.

விஜயநகர் சீரழிய முக்கிய காரணங்கள்:

அகமதுநகர்,கோல்கொண்டா மீது படையெடுத்த விஜயநகரவீரர்கள், அங்குள்ள பெண்கள், முதியவர்கள், குழந்தைகளை கொன்றழித்தது மட்டுமின்றி, முஸ்லீம்களின் புனிதமான வழிபாட்டுதளங்களை நாசப்படுத்தினர், இது சுல்தான்களையும், பொதுமக்களையும் கொதிப்படையசெய்தது. இந்த நிகழ்வே பிற்காலத்திய தலைக்கோட்டை போருக்கும், அதன்பின் நடந்த கொடூரமான விஜயநகர பேரழிவிற்கும் காரணமாய் அமைந்தது.
பீஜப்பூர், அகமதுநகர் சுல்தான்கள் மணஉறவின் மூலம் தங்கள் நெருக்கத்தை அதிகப்படுத்தினர், அகமதுநகர் சுல்தானின் மகள் சாந்தபிபீயை அலிஅடில்ஷா மணந்துகொண்டார், அதன்மூலம் அவருக்கு கோலாப்பூர்கோட்டை சீதனமாய் கிடைத்தது, இப்ராஹிம்ஷாவும், பீடார் சுல்தானும் இத்திருமணநிகழ்வில் கலந்துகொண்டனர். சுல்தான்களின் ஒற்றுமையை ராமராயன் அறிந்திருக்கவில்லை. 
சுல்தான்கள் தக்க தருணத்தை நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் பீஜப்பூர் சுல்தான் தூதுவனை அனுப்பி தன்னிடமிருந்து பிடித்த ராய்ச்சூர், முதுகல் கோட்டையை திருப்பிதருமாறு வேண்டுகோள் விடுத்தான். வழக்கம்போல் ராமராயன் தூதுவனை அசிங்கப்படுத்தி திருப்பி அனுப்பினான்,

சுல்தான்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது 1564ம் ஆண்டு பீஜப்பூர் சமவெளியில் தன் படைகளை கூடும்படி அனைத்து சுல்தான்களும் உத்தரவிட்டனர்.
கிருஷ்ணாநதியின் வடகரையிலுள்ள ராட்சசி-தாங்கிடி என்ற இடத்தில் படைகள் முற்றுகையிட்டன.

ராமராயனுக்கு ஓர் அசட்டுதைரியம் 20 ஆண்டுகளுக்குமேல் போர்அனுபவம் கொண்ட தன்முன் இப்படைகள் என்ன செய்யுமென, நினைத்துவிட்டார். கிருஷ்ணாநதியின் தென்கரையிலிருந்து -இலங்கை வரை பரவியிருந்த தன்படையினை அழைத்தார் ராமராயர். இருதரப்பு படைகளும் சுமார் ஒரு மாதம் முற்றுகையிட்டு எதிர்த்தன. நைஜாம்ஷாவும், குதுப்ஷாவும் கடுமையான தோல்வியடைந்தனர். வலிமைமிக்க ராமராயனோடு சமாதனம் பேசுவதுபோல் முதலில் வந்தனர். அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்தது. மறுபறம் ராமராயனின் முக்கிய தளபதிகளான கிலானி சகோதரர்களிடமும் ரகசியமாய் பேசினர் சுல்தான்கள்.

வரலாற்றாசிரியர் பெரிஷ்டா தன் குறிப்பில் விஜயநகர பேரரசு அன்றைய போரில் ஒன்பது லட்சம் காலாட்படை, 45 ஆயிரம் குதிரைவீரர்கள், 2 ஆயிரம் யானைனைகளை ஈடுபடுத்தியதாக கூறுவார். கிருஷ்ணாநதியை கடக்க முடியாதவாறு முதலில் பின்வாங்கி, பின்னர் முன்னேறியது சுல்தான்படை, இதை எதிர்பார்க்காத ராமராயன் தானே களத்தில் இறங்கினார் ஜனவரி 23 செவ்வாய்க்கிழமை இரண்டு படைகளும் நேருக்குநேராய் சந்தித்தன. அகமது நகர் சுல்தானின் 600 பீரங்கிகள் களத்தில் இறங்கியது. அதில் முக்கியமானது Malik-e-maidan எனப்பட்ட பீரங்கி முக்கியமானது. இதனை மைதானத்தின் நாயகன் என அழைத்தனர்.ஏகப்பட்ட வீரர்களை இது காவு வாங்கியது.

கிலானி சகோதரர்களின் துரோகம் :

 திடீரென ஒரு திருப்பமாய் கிலானிசகோதரர்களின் உத்தரவு வேறுமாதிரி வர, விஜயநகரப்படையிலிருந்த முஸ்லீம் வீரர்கள் தன் படையினரை கணிசமாய் வெட்டிவீழ்த்த ஆரம்பித்தனர். அதிர்ந்த ராமராயன் பல்லக்குத்தூக்கிகளின் துணையுடன் தானே களம்புகுந்தான். பல்லக்கிலிருந்தே நவரத்தினங்கள், பொற்காசுகளை வீரர்களை நோக்கி வீசினார், காசினை பொறுக்கிய வீரர்கள் வீறுகொண்டு எழுந்து தாக்கினர். அச்சமயம் காயமுற்ற யானை ஒன்று பல்லக்குநோக்கி பிளிறி வர, உயிருக்குபயந்த வீரர்கள்(?) பல்லக்கைவிட்டு ஓட்டம்பிடித்தனர்.  
சுல்தான்கள் கைகளில் சிக்கினான் ராமராயன்.
அகமதுநகர சுல்தானிடம் கொண்டுசென்றனர்.
ஆத்திரத்தில் கீழேதள்ளினார் சுல்தான். தெய்வம் என்னை எது வேண்டுமானலும் செய்துகொள்ளட்டும் என அப்போது ராமராயன் கூறியதாய் பெரிஷ்டா கூறுகிறார். ஒரே வீச்சில் சுல்தான் தலையை அரிந்தான். முகமெங்கும் ரத்தக்களரியான தலையை ஓர் ஈட்டியில் குத்தி கூடாரத்திலிருந்து வெளியே கொண்டுவந்தார் சுல்தான்.

விஜயநகரை சுல்தான்கள் ஆறுமாதம் வைச்சி செஞ்சதை அடுத்து பார்ப்போம்.




விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் 2

விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் :

கிருஷ்ணதேவராயரின் மகன் இறந்ததும், ராமராயரின் வலு குன்றியது. அக்குழந்தை இறந்ததும் அச்சுதராயரின் போக்கும் மாறியது. ஆகவே ராமராயர் தன்பக்கம் வலுசேர்க்க தன்படையிலிருந்த பழைய வீரர்களை நீக்கிவிட்டு தன் உறவினர்களையும், நண்பர்களையும் தளபதிகளாய் நியமித்தார். இதற்கிடையில் 1535ல் பதவியேற்ற பீஜப்பூரின் புதிய சுல்தானான இப்ராஹீம் அடில்கான் பதவியிலிருந்து நீக்கிய 3000 இஸ்லாம் படைவீரர்களை தன்படையில் சேர்த்தார் ராமராயர். கிருஷ்ணதேவராயர் பீஜப்பூரை முன்னர் அழித்ததை மனதில் வைத்த பீஜப்பூர் சுல்தான் இப்ராஹிம் விஜயநகரின் அப்போதைய குழப்பமான சூழலை பயண்படுத்தி விஜயநகரத்தை முற்றுகையிட்டார். நாகலாபுரத்தை தரைமட்டமாக்கினார். இருவரில் எவரேனும் ஒருவரோடு சுல்தான் இணைந்தால் ஆபத்து என்பதையுணர்ந்த இருவரும் சமாதானம்பேச இப்ராஹீமை அழைத்தனர். அச்சுதனே அரசனாகவும், அவனுக்கு கீழடங்கிய ஏதோ ஓர் பகுதியில் சுதந்திரஅரசனாய் ராமராயர் தொடரலாம் என ஒருவாறு முடிவுக்கு வந்தனர். இவ்வொப்பந்தம் அச்சுதன் இறக்கும் வரையிலும் தொடர்ந்நது. 

அச்சுதன் இறக்கவும் அவன் மகன் வேங்கடன் அரசனானான், அவன் வயதில் இளைஞனாய் இருந்ததால், அவன் தாய்மாமன் திருமலை அவனுக்கு பதிலாக ஆட்சிநடத்தினான். மக்களின் அதிருப்தியை இருவரும் சம்பாதித்தனர். இந்நிலையில் மறுபுறம் சுல்தான்கள் தங்கள் செல்வாக்கை பெருக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் வேங்கடனின் தாய் தன் தமையனின் அராஜத்தை போக்க அடில்கானிடம் உதவிகோரினார். அடில்கானும் படையை திரட்டி விஜயநகரம் வர, திருமலை பெரும்பணம் கொடுத்து வரும்வழியே திரும்பிபோக கெஞ்சிகேட்க, ராமராயனோ சதாசிவத்தினை மன்னனாக்க அதே அடில்கானிடம் வேண்டினான். அதனையேற்ற அடில்கான் விஜயநகரை நோக்கி படையெடுத்தான். இதில் திருமலை வெற்றிபெற, தனக்குபின் அரசனாக இனி எவரும் முயற்சிபெற கூடாதென தன் சகோதரி, சகோதரிமகன் வேங்கடன் என அனைவரையும் கருவறுத்தான். ராமராயன் தன் ஆதராளவர்களுடன் படையெடுத்து பல போர்களுக்குபின் முடிவில் திருமலையை துங்கபத்திரை கரையில் வெட்டி வீழ்த்தினான். இவ்வளவு ரத்தகளறியுடன் வெறியாட்டம் ஆடி 1543ல் சதாசிவத்திற்கு முடிசூட்டினான் ராமராயன்.

பெயரளவில் சதாசிவம் ஆண்டாலும் ராமராயனே அனைத்து அதிகாரத்தையும் கையிலெடுத்தான். இரண்டாம் தேவராயர் காலத்திலே முஸ்லீம் வீரர்களை படையில் சேர்க்கும் பழக்கம் இருந்தது, ஆனால் அவர் முடிவெடுக்கும் முக்கிய பதவிகளை தருவதை தவிர்த்தார், இந்த கோட்பாட்டை ராமராயன் கடைபிடிக்கவில்லை, அதிகஅளவில் படைகளில் சேர்த்தான். பல உயரிய பதவிகளை அளித்தான். இதனால் அலுவலக முக்கியவிஷயங்களை அவர்களும் தெரிந்து கொண்டனர்.

இவர்களில் முக்கியமான தளபதிகள்
 "கிலானி சகோதரர்கள்". இவர்கள் மிக முக்கிய பொறுப்புகளில் இருந்தனர்.

மேலும் தக்காண முஸ்லீம்கள், ராஜ்ய விவகாரங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ராமராயன் தலையிட்டு, அவர்களுக்குள் ஒற்றுமையேற்படாத வண்ணம் பார்த்துக்கொண்டான். இந்த ஐந்து சுல்தான்களுக்குள்ளும் போர்வரும்போது அந்த விவகாரத்தில் விஜயநகர அரசன் கலந்து கொண்டு சமாதனம் செய்ய வேண்டும், என உடன்படிக்கை மேற்கொண்டனர்.
 இவர்கள் ஒன்றுசேர்ந்தால் பாதிப்பு தனக்குதான் என ராமராயன் எண்ணினான். தங்களுக்குள் ஒற்றுமையின்மை இருப்பதாலயே ராமராயன் தங்களை பயன்படுத்திவருவதை உணர்ந்து கொண்டனர் ஐந்து சுல்தான்களும். 

சுல்தான்கள் குறித்து சிறிய பிளாஸ்பேக்:

டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சி காலத்தில் தக்காண பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா என்பவர். தாஜிய-பாரசீக வம்சத்தில் வந்த இவர் 1347ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் டெல்லி சுல்தானை எதிர்த்து, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை தனி சுதந்திர அரசாக அறிவித்தார். இதன் பிறகு 1425ம் ஆண்டு வரை அஸன்பாத் (இன்றைய குல்பர்கா) நகரை தலைநகரமாக கொண்டு பாமினி சுல்தான்கள் ஆண்டு வந்தார்கள். 1425ம் ஆண்டு தலைநகர் முகம்மதாபாத் (இன்றைய பைதர்) நகருக்கு மாற்றப்பட்டது.

இதன் பிறகு இந்த பேரரசு, விஜயநகர பேரரசால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முகம்மது கவுன் (1466 - 1481) ஆட்சி காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இவரது காலமே பாமினி பேரரசின் பொற்காலமாக விளங்கியது. இதற்கு பிறகு தனது வீழ்ச்சியை அடையத்தொடங்கிய இந்த பேரரசு 1518ம் ஆண்டு ஐந்து பகுதிகளாக பிரிந்தது. அவைகள் அகமதுநகர் சுல்தானகம், கோல்கொண்டா சுல்தானகம், பிஜப்பூர் சுல்தானகம், பீதர் சுல்தானகம் மற்றும் பேரர் சுல்தானகம் ஆகும். இந்த ஐந்து சுல்தானகங்கள் பின்னாளில் தக்காணத்து சுல்தானகங்கள் என அழைக்கப்பட்டன.

அடுத்த பகுதிகளில் சுல்தான்களின் எழுச்சியை காண்போம்..
பீஜப்பூர் சுல்தான்களின் கண்காணிப்பு கோபுரம்




Friday, 17 July 2020

விஜயநகரத்தின் தோற்றம் 1

ஹம்பி- பதாமி மரபுநடையில் கலந்து கொள்ளும் முன் பெரியதாக விஜயநகர பேரரசு குறித்த ஆர்வம் இல்லை. நேரில் கண்டபின் அப்பேரரசின் அன்றைய விரிவாக்கம் குறித்தும், சிதைக்கப்பட்ட அந்த தலைநகரின் அவலநிலையையும், துரோகத்தால் வஞ்சிக்கப்பட்ட அப்பேரரசு குறித்த தகவலை தேடி படிக்க ஆரம்பித்ததில், நான் படித்த தகவலை சுருக்கமாய் பதிவிடுகிறேன். இதில் முக்கிய பகுதியாக பேரரசின் வீழ்ச்சிக்கு அடிகோலிய ராமராயரையும், அதனால் அவர் அடைந்த கொடூரத்தையும் பார்ப்போம்.

விஜயநகரத்தின் தோற்றம்:

ஹொய்சாள மன்னர் மூன்றாம் வீரவல்லாளனிடம் வேலை பார்த்தவர்கள் சங்கமன் என்பவரின் மகன்கள் ஹரிஹரன், புக்கரன், கம்பணன், மாரப்பன், முத்தப்பன் என்ற ஐவர்கள். 1343ம் ஆண்டு வீரவல்லாளன் போரில் தோற்று கண்ணணூர்-கொப்பம் எனுமிடத்தில் மதுரை சுல்தான் கியாத்-உதின் என்பவரால் சாட்டையால் அடிவாங்கி, உயிருடன் உடல்முழுவதும் தோலைஉரித்து, தோலுரிப்பதென்றால் உண்மையாகவே உரித்தகோழிபோல் ஆக்குவது. கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இக்கதை இன்றும் தமிழகத்தின் தென்பகுதிகளில் வீரவல்லாளன் சிந்து என பாடப்பட்டு வருகிறது. இறக்கும்போது இவருக்கு 70 வயதிற்குமேல் இருக்கும். இவரது மகனுக்கு வாரிசின்மையால், வடக்கு எல்லையான ஹோஸ்பேட் பகுதியில் ஹரிஹரனை மகாமண்டலீஸ்வரனாய் நியமனம் செய்தார் என கருதப்படுகிறது. இரண்டாம்தம்பி புக்கன் அனந்தப்பூர் மாவட்டத்தில் ஆளுநராக்கப்படுகிறார். மூன்றாம் தம்பி மாரப்பன் கடம்பர்களிடமிருந்து கொங்கனியை கைப்பற்றுகிறார். சந்திரகுத்தி, ஷிமோகா பகுதிகளில் இவர் ஆட்சி நடைபெறுகிறது. 
சுற்றிலும் மலைகள், துங்கப்பத்திரை நதியின் நீர்வளம், அங்குள்ள சுழல்கள், முதலைகள் இவற்றைத்தாண்டி படைகள் நுழைவது கடினம் என கருதி, தங்கள் சாம்ராஜ்யத்தின் தலைநகரை இன்றைய ஹம்பி என அழைக்கப்படும் பகுதியில் அமைத்தனர். இதற்கு முக்கிய காரணம் முகம்மதியர் ஆட்சி தென்னகத்தில் பரவவிடக்கூடாது என்ற எண்ணமே.
இவ்வம்சத்தில் ஹரிஹரர், புக்கருக்கு அடுத்து பலர் ஆண்டாலும், குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ணதேவராயராவார்.

கிருஷ்ணதேவராயர்:
இவர் 1509-1530 வரை ஆண்டவர். இவரது சீர்மிகு ஆட்சி குறித்து நிறைய கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் பெரிஸ்டா, பாரோஸ், கூட்டா முதலிய வரலாற்றாசிரியர்களும் எடுத்துக்காட்டியுள்ளனர்.ஹம்பியிலுள்ள விருபாக்ஷர் கோவிலின் கல்வெட்டுப்படி தன் 22ம் வயதில் 1509ம் ஆண்டு, ஜீன் மாதம் பதவியேற்றது தெரிகிறது. பாமினி சுல்தான் பீஜப்பூர் சுல்தான்களிடம் அடிக்கடி போர் நிகழ்த்தி வென்றுள்ளார். அதிலும் இஸ்மேயில் அடில் அடிஷா எனும் சுல்தான் அடிக்கடி போரிட்டுள்ளார். 
தன் இறுதிகாலத்தில் தன் தம்பி அச்சுதராயரை முடிசூட்டுகிறார். இதன்காரணம் கிருஷ்ணதேவராயனின் மகனுக்கு ஒன்றரை வயது கூட நிரம்பாத குழந்தையாக இருந்ததே, இதனால் கிருஷ்ணதேவராயரின் மருமேகன் ராமராயர் குழந்தையை அரசனாக்கி தான் வழிநடத்த முன்வந்தார். இதனால் அச்சுதருக்கும், ராமராயருக்கும் உடன்பாடு தோன்றி அச்சுதர் அரசரானார். கிருஷ்ணதேவராயரின் சிறுகுழந்தை இறந்துவிட, அவரின் அண்ணன் மகனை அரசனாக்க முனைந்தார் ராமராயர்,அச்சமயம் அது ஈடேறவில்லை. 1542ல் அச்சுதர் இறக்க, ராமராயரின் ஆசியில் சதாசிவராயர் ஆட்சிலேறினார். பெயரளவில்தான் சதாசிவராயர் ஆட்சி, ஆனால் அதிகாரம் செலுத்தியதோ ராமராயர். இந்த ராமராயர் ஆட்சியில்தான் மிகப்பெரிய விஜயநகர சாம்ராஜ்யம் துரோகத்தால் வீழ்ந்தது, அவ்வரலாற்றை அடுத்து காண்போம்.



வீழ்ந்தது விஜயநகரம் 3

வீழ்ந்தது விஜயநகரம் : ராமராயன் தன் வாழ்க்கையை சாதாரண அலுவலனாக கோல்கொண்டாவில் தன் வாழ்க்கையை தொடங்கியவன். ஆதலால் கோல்கொண்டாவின் அரசியல் விவகா...